
விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் 4 சீசனின் டைட்டில் வின்னராக திவாகர் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இதுவரை சூப்பர் சிங்கர் சீசனில் இல்லாதவாறு 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களின் வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை முதல் மூன்று சூப்பர் சிங்கர் சீசனிலும் ஒரு வெற்றியாளர் இவ்வளவு அதிகமான வாக்குகளை பெற்றதில்லை.
இப்போட்டியை நேரடியாக விஜய் டிவி இணையப் பரப்பிலும் ஒளிபரப்பு செய்திருந்ததும், சுமார் இறுதி தருணங்களை சுமார் 30,000 ற்கு மேற்பட்ட ரசிகர்கள் யூடியூப் வாயிலாக நேரடியாக கண்டுகளித்ததும் குறிப்பிடத்தக்கது.
‘இப்போ எனக்கு சொந்தமா ஒரு வீடு இருக்கு’ என கண் கலங்கியவாறு திவாகர் பரிசு பெற்ற தருணத்தில் கூறிய போது, தனது கடந்த கால வாழ்க்கையை வறுமையின் பிடி எந்தளவு ஆழத்திற்கு கட்டிப் போட்டிருந்தது என்பதும், அதிலிருந்து தான் மீள்வதற்கும், தனது பெற்றோரை மீட்பதற்கும் எந்தளவு கடினமான உழைப்பை மேற்கொண்டிருந்தார் என்பதும் பலராலும் அடையாளம் கண்டிருக்க முடியும்.
Free Style சுற்றில், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘அரபிக் கடலோரம்’ பாடலையும், Challenging சுற்றில் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலையும் பாடினார் திவாகர். இதில் இரண்டாவது பாடலின் போது ‘மாமா, மாப்ளே’ என இரு குரலையும் தானே மூச்செடுத்துப் பாடி அரங்கையே அசரவைத்திருந்தார் திவாகர்.
இரண்டாம் இடத்தை சையத் சுபான் பிடித்தார். அவர் Free Style சுற்றில் பாடிய ‘விடைகொடு எங்கள் தாயே’ பாடல், அந்தப் பாடலை பாடகர் நிஜமாகப் பாடிய மாணிக்க விநாயகத்தை மாத்திரமல்லாது, முழு அரங்கையுமே கண்கலங்க வைத்ததுடன், துயர உணர்ச்சியால் கட்டிப் போட்டிருந்தது.
இரண்டாம் இடத்தை, இரண்டு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று சையத் சுபான் பிடித்துக் கொண்ட போதும், அவரே நடுவர்களின் முதல் தெரிவாக இருந்திருந்தது பின்னர் தெரியவந்தது. மூன்றாம் இடத்தை சரத் சந்தோஷும், பார்வதி, சோனியா ஆகியோர் ஆறுதல் பரிசில்களையும் பெற்றுக் கொண்டனர்.
Post a Comment